தேசவிரோத திமுக கூட்டணி அரசை அகற்ற அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்துள்ளோம் – பியூஷ் கோயல்
தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் இன்று தமிழ்நாட்டுக்கு வருகை தந்தார். இந்நிலையில் அவரது முன்னிலையில், என்.டி.ஏ. கூட்டணியில் டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக இணைந்தது. கூட்டணி முடிவான பிறகு அமைச்சர் பியூஷ் கோயல், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்ததாவது; “தினகரன் மீண்டும் என்.டி.ஏ. கூட்டணிக்கு வந்துள்ளார். 2004 – 2007 எம்பி ஆக இருந்த போது சிறப்பாக பணியாற்றினார். ஊழல் திமுக அரசை அகற்ற என்.டி.ஏ. கூட்டணி தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, ஜி.கே. வாசன் ஆகியோர் ஒன்றிணைந்துள்ளனர்.
தமிழ்நாடு மக்களையும், கலாச்சாரத்தையும் வஞ்சிக்கும், தேசவிரோத திமுக கூட்டணி அரசை அகற்ற நாங்கள் அனைவரும் ஒரே குடும்பமாக இணைந்துள்ளோம். மு.க. ஸ்டாலின், சபரீசன் உள்ளிட்டோரின் ஊழல்கள் தமிழ்நாடு மக்கள் முன் அம்பலப்படுத்தப்படும்.
நல்ல தலைமை, நல்லாட்சி, சிறந்த திட்டங்களுக்கும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் என்டிஏ இணைந்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி மக்களுக்கு சிறப்பான ஆட்சியை வழங்கும்” எனத் தெரிவித்தார்.





