கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சிருக்கணும் – கண்ணீர் விட்டு அழுத நடிகர் சத்யராஜ்
சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ், “1967 முன்பு தமிழ்நாட்டில் நடைபெற்றது பணக்காரர்களின் ஆட்சி. ஏழை பங்காளராக காமராஜர் இருந்தார். ஆனால், அதிகாரத்தில் இருந்தவர்கள் அனைவரும் பணக்காரர்களாகவும், பண்ணையாளர்களாவும் இருந்தனர். அண்ணா ஆட்சிக்கு வந்த பின்பு தான் தமிழ்நாடு நிமிர்ந்தது.
நான் திமுக தான் என்பதை ஆணித்தரமாக இங்கு பதிய வைக்கிறேன். கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்றிருக்க வேண்டும். எனக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது. நான் ஜாலியான நபர். ஆனால், இதை என்னால் அப்படி எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஓகே. பட்டு திருந்தினால் தான் அறிவு வரும். எப்படி பட்ட தலைவரை தோற்கடித்துள்ளோம் என்பது உணர்வீர்கள்.
தமிழக முதல்வர் விஜய் அண்மையில் பேசிய மேடைப்பேச்சை பார்த்தேன். ஒரு முதல்வர் பேசும் பேச்சா அது.. வாயில் நல்லா வருது என்கிறார். தமிழகத்தை பொற்காலமாக மாற்றியது திராவிட மாடல் ஆட்சி. இப்போது ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுக்கிறேன். மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த திட்டங்களுக்கு வேறு பெயர் வைத்துக்கொள்ளுங்கள். அந்த பெயரை மட்டும் மாற்றினாலே உங்களுக்கு நல்ல பெயர் வந்துவிடும்.
ஆனால், அவர் கொண்டு வந்த நலத்திட்டங்களை மாற்றினால் சரிப்பட்டு வராது. சினிமா மோகன் அனைவருக்கும் இருக்கிறது தான். அதை மறுக்கவில்லை. ஆனால், என்ன மாதிரியான மாற்றம் வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். கருத்தியல் ரீதியாக மாற்றத்தை எதிர்பார்த்திருக்கலாம். திமுக பிடிக்கவில்லை என்றால், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கோ, விசிகவுக்கோ வாக்களித்து வெற்றிபெற வைத்திருக்கலாம்.





