18 வயது நிறைந்த சென்னை பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பதிவு செய்து, 18 வயது நிறைவடைந்தும் இதுவரை முதிர்வுத் தொகை கிடைக்கப் பெறாத சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தகுதியுள்ள பயனாளிகள் தங்களின் முதிர்வுத் தொகையைப் பெற்றுக் கொள்ள தற்பொழுது விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் எஸ். மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
பயனாளிகள் தங்களது வைப்பு நிதிப் பத்திரம், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்று, வங்கியின் கணக்கு புத்தகம் ஆகிய ஆவணங்களுடன் சென்னை, இராஜாஜி சாலையில் உள்ள சிங்காரவேலர் மாளிகையின் 8-வது தளத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆட்சியரக சமூக நல அலுவலகத்திற்குச் சென்று, அங்குள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் மற்றும் நகர்நல அலுவலர்களிடம் சமர்ப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.





