சசிகலா. டிடிவி தினகரனை அதிமுகவில் சேர்ப்பது குறித்து கட்சியின் பொதுக்குழு முடிவு செய்யும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் துரோகிகள் உடன் ஒருபோதும் இணைய மாட்டோம் என டிடிவி தினகரன் பதிலடி அளித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் அமைந்துள்ள மருது சகோதரர்களின் நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர்களின் 218 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அரசு சார்பில் விழா நடைபெற்றது.
இதில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டு மருது சகோதரர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ பன்னீர்செல்வம் இடைத் தேர்தலைப் போன்று உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுக வெற்றி தொடரும் என்றார் மக்களவைத் தேர்தலை தொடர்ந்து பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது என்று கூறியவர் டிசம்பரில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
சசிகலா டிடிவி தினகரன் அதிமுகவில் மீண்டும் சேர்க்கப்படுவார்களா என்று கேள்விக்கு பதில் ஓபிஎஸ் கட்சிப் பொதுக்குழு அதைப்பற்றி முடிவெடுக்கும் என குறிப்பிட்டார். இந்நிலையில் அதிமுகவில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுகவில் தங்களை சேர்த்துக் கொள்ளும்படி யாரும் கேட்கவில்லை என்றும் துரோகிகள் இடம் ஒருபோதும் விடமாட்டோம் என்றும் அவர் தெரிவித்தார்.
நாங்குநேரி விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி பண பலத்தால் கிடைத்த வெற்றி என்றும் டிடிவி தினகரன் விமர்சித்தார். இதனிடையே சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடினாலும் சசிகலா டிடிவி தினகரன் தொடர்பாக ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவு மீண்டும் எடுக்கப்படும் என தெரிவித்தார்.