வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
புதுக்கோட்டை, சிவகங்கை, கரூர், திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென் தமிழக கடலோர மாவட்டங்கள் ஏனைய ஏழு மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. வெப்பநிலை மாறுபாட்டின் காரணமாக இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட சற்று குறைவாக பதிவாக வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






