கொரோனா தடுப்பு குறித்த ஆய்வு : முதல் முறையாக தென்மாவட்டங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயணம்!!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதல் முறையாக தென் மாவட்டங்களுக்கு இரு நாட்கள் பயணம் மேற்கொள்கிறார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகம் அல்லோகலப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், கண்ணுக்குத் தெரியாத இந்த வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தே வருகிறது.
ஆரம்ப கட்டத்தில் இந்த வைரஸ் பாதிப்பு சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் வேகமெடுத்து பயமுறுத்தியது. தற்போது தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு எண்ணிக்கை விறுவிறுவென உயரத் தொடங்கியுள்ளது.
பாதிப்பு பல மடங்கு
இதில் தென் மாவட்டங்களில் தான் சமீப நாட்களாக தொற்று பாதிப்பு மிரட்டி வருகிறது. அதிலும் மதுரை, தேனி, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்களில் தினசரி பாதிப்பு பல மடங்காக அதிகரித்துள்ளது. இதையடுத்து தென்மாவட்டங்களில் கொரோணா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
2 நாள் பயணம்
இதன் ஒரு கட்டமாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தென்மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்ய 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். நாளை மறுதினம் (6-ந்தேதி) மதுரை செல்லும் முதல்வர் எடப்பாடி, அன்றைய தினம் மதுரை மற்றும் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோணா தடுப்பு நடவடிக்கை பணிகளை ஆய்வு செய்கிறார். மறுநாள் 7-ந் தேதி நெல்லை செல்லும் முதல்வர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, குமரி மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பரவத் தொடங்கியது முதல் சென்னையிலேயே முகாமிட்டு தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கிவிட்டு வந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அடிக்கடி தனது சொந்த மாவட்ட மான சேலம் மாவட்டத்திற்கு விசிட் செய்வதை வாடிக்கையாக்கி வந்தார்.
கடந்த மாதம் திருச்சியில் மட்டும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட நிலையில், இந்த கொரோனா காலத்தில் தற்போது தென்மாவட்டங்களுக்கு முதன் முறையாக பயணம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






