வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட இருந்த 140 தங்க காசுகள்..!
காரைக்கால் திருநள்ளாரில் வாக்காளர்களுக்கு வினியோகம் செய்யப்பட்டு இருந்ததாக கூறப்படும் 140 தங்க காசுளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
புதுச்சேரி, காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியில் உள்ள சூரக்குடி கிராமப்பகுதியில் வாக்காளர்களுக்கு தங்கக்காசு கொடுப்பதாக தேர்தல் பறக்கும் படைக்கு புகார் வந்ததையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் அந்த பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அந்த பகுதியில் இருந்த சிலர் தேர்தல் பறக்கும் படையிரை பார்த்தவுடன் கையில் இருந்த பையை போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனை கைப்பற்றிய அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது 149 ஒரு கிராம் தங்கக் காசுகளும், அதேபோன்று 96 ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
கைப்பற்றிய பறக்கும் படை அதிகாரிகள் இதனை உடனடியாக திருநள்ளாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். திருநள்ளாறு போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






