கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் 10 நாட்களாக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை அந்த தொகுதி எம்பி ராகுல் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். வயநாட்டில் இருந்து கர்நாடகாவை இணைக்கும் சுல்தான் பத்தேரி குண்டல்பேட்டை சாலை பந்திப்பூர் புலிகள் காப்பக வனப்பகுதி வழியாக செல்கிறது. அதனால் அந்த பகுதியில் இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுல்தான் பத்தேரி குண்டல்பேட்டை சாலையில் நிரந்தரமாக போக்குவரத்திற்கு ஏன் தடை விதிக்க கூடாது என உச்சநீதிமன்றம் கருத்து கேட்டுள்ளது. அதனால் அந்த சாலை நிரந்தரமாக மூடப்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. போக்குவரத்திற்கு தடை விதிக்கும் முடிவை கைவிட கோரி கடந்த 25ஆம் தேதி முதல் வயநாடு மாவட்ட இளைஞர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அனைத்து தரப்பினரும் ஆதரவு அளித்துள்ள நிலையில் வயநாடு தொகுதி எம்பி என்ற முறையில் ராகுல்காந்தி போராட்டக்காரர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசி உள்ளதாகவும் சட்டரீதியாக பிரச்சினைகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார்.