கோவை : ஈச்சனாரி விநாயகர் திருக்கோவிலில் புத்தாண்டையொட்டி திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் !!!
கொரோனா பரவல் காரணமாக ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இருப்பினும் வழிபாட்டுத் தலங்களில் சிறப்பு வழிபாடுகள் செய்ய பல்வேறு கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் உள்ள தேவாலயங்கள் வண்ண,வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நள்ளிரவில் சிறப்பு கூட்டுப்பிரார்த்தனை நடைபெற்றது.
இதில் கொரோனா பாதுகாப்பு விதிகளை பின்பற்றி குறிப்பிட்ட அளவிலானோர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் இன்று அதிகாலை முதலே கோவையில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பொள்ளாச்சி சாலையில் உள்ள ஈச்சனாரி விநாயகர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குடும்பத்துடன் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அபிஷேக பூஜைகளில் பால், தயிர், நெய், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களை கொண்டு மூலவர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக பூஜையும்,தொடர்ந்து அலங்கார பூஜையும் நடைபெற்றது.
பக்தர்கள் அர்ச்சனை பொருட்கள் மற்றும் இதர பொருட்களை கோவிலுக்குள் கொண்டு வருவதை தவிர்க்கவும்,65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்,நோய் போன்ற இணை நோய் கொண்டவர்கள், கர்ப்பிணி பெண்கள்,10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்கவும், சுவாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவும் கோவில் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
காலை 6 மணியளவில் கோவில் வளாகத்தில் உள்ள கணபதி வேள்வி மண்டபத்தில் 2021 ஆம் ஆண்டு சிறப்பாக அமையவும்,உலக அமைதி,ஒற்றுமை, வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்குக்காகவும், கொரோனா நோய்த்தொற்று உலகில் இருந்து நீங்கவும் வேண்டி ஹோமத்துடன் சிறப்பு வேள்வி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.






