மதிப்பெண் மாற்ற பட்டியல் இன்று பிற்பகல் வெளியாகும் என அறிவிப்பு
தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் நகல்களைப் பெற்ற மாணவர்கள், தங்களின் மதிப்பெண்களை மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்வதற்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு கடந்த ஜூன் மாதத்தில் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாணவர்களிடம் இருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் அடிப்படையில் விடைத்தாள்களை மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டல் செய்யும் பணிகள் கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி தொடங்கி, ஜூலை மாதம் 4-ஆம் தேதியுடன் முழுமையாக நிறைவடைந்தது.
இந்த நிலையில், மதிப்பெண் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்த மாணவர்களில், மதிப்பெண்களில் மாற்றம் ஏற்பட்டுள்ள தேர்வர்களின் பதிவு எண்கள் அடங்கிய புதிய பட்டியல் இன்று (ஜூலை 6) பிற்பகலில் அரசு தேர்வுகள் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்பதில் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் கே.சசிகலா தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.





