அக்னி வீரர்களுக்கு கூடுதல் முக்கியத்துவம்: 25% வரம்பை 75% ஆக உயர்த்த முப்படைகள் திட்டம்
ராணுவத்தில் 4 ஆண்டுகள் தங்களின் பணிக்காலத்தை நிறைவு செய்யும் அக்னி வீரர்களில் தொடர்ந்து பணியில் தக்கவைத்துக் கொள்ளப்படும் வீரர்களின் சதவீதத்தை அதிகரிக்க முப்படைகள் திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. தற்போதைய விதிமுறைகளின்படி, மூன்று படைகளிலும் தலா 25 சதவீத வீரர்கள் மட்டுமே தொடர்ந்து வழக்கமான வீரர்களாகப் பணியில் நீடிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்னிபாத் (Agnipath) திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட அக்னிவீரர்களுக்கான பயிற்சி கடந்த 2023-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆரம்பித்தது. இதில் சேர்ந்த முதல் தொகுதி அக்னிவீரர்களின் 4 ஆண்டு பணிக்காலம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் நிறைவடைய உள்ளது. பணிக்காலம் முடிந்ததும் அவர்கள் அனைவரும் முதலில் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். அதன் பிறகு, தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்ற விருப்பம் தெரிவிக்கும் அக்னிவீரர்களில் இருந்து, தகுதியின் அடிப்படையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வழக்கமான ராணுவ வீரர்களாக மீண்டும் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
தற்போதைய தகவல்களின்படி, கடற்படை தங்களின் பிரிவில் அக்னிவீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் சதவீதத்தை 75 சதவீதமாக உயர்த்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், தரைப்படை மற்றும் விமானப்படை ஆகியவை இந்த சதவீதத்தைத் தற்போதைய 25 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தலாம் என கூறப்படுகிறது. இருப்பினும், தற்போதைய நிலைவரப்படி அக்னிவீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் சதவீதம் 25 ஆக மட்டுமே நீடிக்கிறது என்று பாதுகாப்புப் படைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் பல்வேறு ராணுவ நடவடிக்கைகளில் பங்கேற்ற, புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் நவீன ஆயுதங்களைக் கையாள்வதில் அனுபவமிக்க, பயிற்சி பெற்ற வீரர்களின் தேவை அதிகமாக இருப்பதை உணர்ந்தே இந்த சதவீதத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இது குறித்து, முப்படைகளுக்கும் ராணுவ விவகாரங்கள் துறைக்கும் (DMA) இடையே ஆலோசனைகள் நடைபெறுவதாக தெரிகிறது.
தகவல்களின் படி, அக்னிவீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் சதவீதத்தை ஒட்டுமொத்தமாக அதிகரிக்க அரசு ஒப்புதல் அளிக்காவிட்டாலும், சில குறிப்பிட்ட சிறப்புப் பிரிவுகளில் அதிக அனுபவம் வாய்ந்த அக்னிவீரர்கள் அதிக சதவீதத்தில் சேர்த்துக் கொள்ளப்படலாம். அதே நேரத்தில், மற்ற பிரிவுகளில் தங்களின் 4 ஆண்டு பணிக்காலத்தில் இருக்கும் அக்னிவீரர்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தப்படலாம்.
கூடுதல் சதவீத வீரர்களைத் தக்கவைத்துக் கொள்வது தொடர்பான ஒரு முன்மொழிவு கடந்த காலத்தில் ராணுவ விவகாரங்கள் துறைக்கு அனுப்பப்பட்டது, ஆனால் அது மறுமதிப்பீட்டிற்காகத் திருப்பி அனுப்பப்பட்டது. அக்னிபாத் திட்டத்தின்கீழ் சிப்பாய்கள், மாலுமிகள் மற்றும் விமானப்படை வீரர்களுக்கான பயிற்சிகள் முப்படைகளிலும் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தெரிகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளில், அக்னிவீரர்களுக்கான பல்வேறு திட்டங்களுக்காகப் பல்வேறு வங்கிகளுடன் தொடர்ச்சியான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவர்களுக்கான விடுப்பு போன்ற இதர சலுகைகளும் வழக்கமான ராணுவ வீரர்களுக்கு இணையான அளவிலேயே வழங்கப்பட்டு வருகின்றன.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தரைப்படை தளபதிகள் மாநாட்டில் அக்னிவீரர்களைத் தக்கவைத்துக் கொள்ளும் சதவீதம் குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கடந்த ஆண்டு அக்டோபரில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால், அந்தச் செய்திக்கு மறுப்புத் தெரிவித்த ராணுவம், இம்மாநாட்டின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சி நிரலில் அத்தகைய திட்டம் எதுவும் இடம் பெறவில்லை என்று குறிப்பிட்டிருந்தது.





