தோள் கொடுக்கும் ‘வைகை பட்டாளம்’ – இராணுவ வீரர்களுக்கு கண்ணீர் மல்க கிராம மக்கள் நன்றி !
இந்திய எல்லையில் பணியாற்றும் இராணுவ வீரர்கள், வாட்ஸ்அப் குழுவால் இணைந்து ஏழை, எளிய மக்களை நெகிழ்ச்சியடையச் செய்து வருகின்றனர். கொரோனா இக்கட்டான சூழலில் மக்களுக்கு உதவி செய்யும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இராணுவ வீரர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது.
கொரோனாவின் கோரத் தாண்டவம் கடுமையாக வஞ்சித்தாலும் அதேசமயம், பல்வேறு இடங்களில் மனித நேயமும் மலர்ந்தது. இந்திய எல்லைகளைப் பாதுகாக்கும் இராணுவ வீரர்கள், எங்களால் ஊருக்குள்ளேயும் மக்களைப் பாதுகாக்க முடியும் என்று நிரூபித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்குப் பின்னர் ஊரடங்கு உத்தரவு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து மக்கள் பணிக்கு செல்லாமல் இருந்த சமயத்தில் பல உதவிகளை செய்தனர்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே சன்னதி புதுக்குளம் என்ற கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் வசதி, மின்சார வசதி என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாமல் இருந்தனர். இந்நிலையில் இன்று 74 வது சுதந்திர தினத்தை தொடர்ந்து தண்ணீர் டேங் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.
இதனால் இப்பகுதி மக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் தங்களது கிராமத்தின் நிலையை உணர்ந்து கூடுதல் உதவிகள் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

வைகை பட்டாளம் நண்பர்கள் கூறுகையில்…, ” நாங்கள் உணவு, காய்கறி, என பல உதவிகளை செய்துள்ளோம். மேலும் 1500 மரக்கன்றுகளையும் நட்டுள்ளோம். தற்போது இந்த கிராமத்திற்கு தண்ணீர் வசதி மற்றும் அடிப்படை வசதிகளை செய்துள்ளோம் என்றனர்.






