வேலை கிடைத்ததற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக கருதி உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்..!
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வேலை கிடைத்ததற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதாக கருதி தண்டவாளத்தில் தலையை வைத்து உயிரையே மாய்த்துக் கொண்ட விபரீதம் நிகழ்ந்துள்ளது. எள்ளுவிலையை சேர்ந்த 32 வயதான நவீன் என்ற பொறியியல் பட்டதாரிக்கு நீண்டகாலமாக வேலை கிடைக்கவில்லை.
வங்கித் தேர்வுகளை எழுதி வந்த பின் அண்மையில் மும்பையில் உள்ள பாங்க் ஆப் இந்தியா வங்கியில் உதவி மேலாளர் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். 15 நாட்கள் பணியாற்றிய அவர் மார்த்தாண்டத்துக்கு வந்துள்ளார்.
அங்கு நண்பரை சந்தித்த நவீன் தான் ஊருக்கு வந்துவிட்டதாக தனது சகோதரருக்கு தகவல் அளித்துள்ளார். தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் கிடந்த உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
பாண்ட் பாக்கெட்டில் இருந்த ஆதார் அட்டை, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆதாரங்கள் அது நவீனின் உடல் என உறுதிப்படுத்தப்பட்டது. வேலை கிடைத்தால் தனது உயிரை காணிக்கையாக தருவதாக இறைவனிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க இந்த முடிவை எடுத்திருப்பதாக நவீன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது.
அவற்றை கைப்பற்றிய ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






