புதுச்சேரி மாநிலம் வீராம்பட்டினம் பகுதியில் இரு மீனவ கிராமங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 3 மீனவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது. கலவரத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். வீராம்பட்டினம் மற்றும் மற்றொரு கிராமத்திற்கு இடையே சுருக்குவலை பயன்படுத்துவது தொடர்பாக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு மோதல் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து நல்லவாடு பகுதியில் வைக்கப்பட்டிருந்த மீன் பிடி வலை வீராம்பட்டினம் மீனவர்கள் தீ வைத்ததாக தெரிகிறது இதனால் இரு தரப்பு மீனவர்கள் இடையே கலவரம் மூண்டது அதனை தடுக்கும் பொருட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதனிடையே நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு கிராமத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இருதரப்பினரும் கடுமையான ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.
அதில் மூன்று பேருக்கு கத்திக்குத்து விழுந்தது தகவலறிந்து நிகழ்வு இடத்திற்கு வந்த காவல்துறையினர் மீனவர்களிடையே ஏற்பட்ட கலவரத்தை கட்டுப்படுத்த வானத்தை நோக்கி இருபது முறை துப்பாக்கியால் சுட்டனர். ஆயுதமேந்திய காவல் துறையினர் கடலோரத்தில் குவிக்கப்பட்டுள்ள நிலையில் வீராம்பட்டினம் நல்லவாடு ஆகிய கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட துணை ஆட்சியர் சுதாகர் தெரிவித்துள்ளார்.