கோவை ரயில் நிலையத்தின் பின்புறம் கூட்ஸ் ரோட்டில் ரயில்வே பார்சல் அலுவலகம் உள்ளது. இருசக்கர வாகனம் பார்சல் செய்யும் இடம் மற்றும் பொருட்கள் வைக்கும் இடம் ஆகியவை இந்த கட்டிடத்தில் செயல்பட்டு வந்தது.
ரயில்வேக்கு சொந்தமான இந்த அலுவலக கட்டிடம் இன்று அதிகாலையில் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக திடீரென இடிந்து விழுந்தது.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை ரயில்வே போலீசாரும், தீயணைப்பு துறையினரும் மீட்டனர்.
மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி பாலசுப்பிரமணியம் தலைமையில் 5 தீயணைப்பு வாகனங்களில் 50 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.

இதில் இடிபாடுகளில் சிக்கிய ஓப்பந்த பணியாளர்கள் பவிழமணி,இப்ராஹிம் மற்றும் வடமாநில தொழிலாளி ராஜூ ஆகிய மூன்று பேரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இந்த விபத்து குறித்து தீயணைப்புத் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக இந்த விபத்து நடைபெற்று உள்ளதாக மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்ரமணியம் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் மூலம் இடிபாடுகளை அகற்றும் பணியினை தீயணைப்புத்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் இப்ராஹிம் மற்றும் பவிழமணி ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். படுகாயமடைந்த வடமாநில தொழிலாளி ராஜூ தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கனமழையின் காரணமாக கோவை ரயில் நிலைய பார்சல் அலுவலக கட்டிடம் அதிகாலையில் இடிந்து விழுந்ததில் ஒப்பந்த தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






