இன்று கொரோனா பாதிப்புக்கு ஆளான விஐபிக்கள் பட்டியல்: குமரி எம்.பி., வசந்தகுமார், புதுவை அமைச்சர்கள் இருவர், தமிழக உயர் ஐஏஎஸ் அதிகாரிகள் 2 பேருக்கும் தொற்று!!
ப
தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் விஐபிக்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இன்றைய பட்டியலில் குமரி எம்.பி., வசந்தகுமார், ஐஏஎஸ் உயர் அதிகாரிகளான வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திர ரெட்டி, போக்குவரத்து ஆணையர் ஜவஹர் ஆகியோருக்கும், புதுச்சேரி மாநிலத்தில் அமைச்சர்கள் இருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பும் உயிரிழப்பும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக ஒரே சீரான வேகத்தில் சென்று கொண்டுள்ளது. தினசரி பாதிப்பு 5 ஆயிரத்திற்கு மேலாகவும், உயிரிழப்பும் தினசரி 100ஐ கடந்தும் பதிவாகி வருகிறது. இதுவரையிலான தொற்று பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழப்பும் 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு பட்டியலில் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் என விஐபிக்கள் பலரும் தினமும் இடம் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது. கொரோணா பாதிப்புக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் என பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 30 எம்எல்ஏக்கள் வரை ஆளாகி உள்ளனர்.
இந்நிலையில், நாகை, மயிலாடுதுறை, சிவகங்கை தொகுதி எம்.பி.க்களும் தொற்று பாதிப்புக்கு ஆளான நிலையில் 4வதாக கன்னியாகுமரி எம்.பி., வசந்தகுமாருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. வசந்தகுமாரின் மனைவிக்கும் தொற்று உறுதியான நிலையில் இருவரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டவருமான ரூபி மனோகரனுக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக உயர் ஐஏஎஸ் அதிகாரிகளான வருவாய் நிர்வாக ஆணையர் பனீந்திர ரெட்டி, போக்குவரத்து ஆணையர் ஜவஹர் ஆகியோருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, கொரோனா பாதிப்புக்கு ஆளாகும் விஐபிக்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
இதற்கிடையே அண்டை மாநிலமான புதுச்சேரியிலும் கொரோனா பாதிப்புக்கு அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன் ஆகிய இருவரும் ஆளாகியுள்ள நிலையில் அம்மாநில அரசியல்வாதிகளும் கலக்கத்தில் உள்ளனர்.






