ரூ.8 கோடிக்கு மேல் ஊழல், மணல் கொள்ளை..!
அறப்போர் இயக்கம் அதன் சமூக வலைதள பதிவில், “திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி ஏரியில் ரூ 8 கோடி அளவில் மண் திருட்டில் ஈடுபட்டு ஊழல் செய்து தன் குடும்ப நிலத்தில் அந்த மண்ணை கொட்டி நிலத்தை சமப்படுத்தி தி.மு.க இளைஞர் அணி மாநாடு நடத்திய முன்னாள் அமைச்சர் எ.வ வேலு, அவர் மகன் குமரன் மற்றும் அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்கத்தில் (DVAC) அறப்போர் புகார் அளித்துள்ளது. உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நேர்மையான விசாரணை நடத்த கோரி புகார் மற்றும் ஆதார ஆவணங்கள் இன்றைய தினம் அனுப்பி உள்ளோம்.
2025 டிசம்பர் 14 அன்று திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடி கிராமத்தில் உள்ள “கலைஞர் திடல்” நிலத்தில் தி.மு.க வடமண்டல இளைஞர்அணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டை ஒருங்கிணைத்தவர் தி.மு.க வடக்கு மண்டல பொறுப்பாளரான முன்னாள் அமைச்சர் எ வ வேலு. இந்த மாநாடு நடந்த 124 ஏக்கர் பரப்பளவு உள்ள கலைஞர் திடல் முன்னாள் அமைச்சர் வேலு மகன் எவ குமரனின் அருணை ப்ராடக்ட்ஸ் அண்ட் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது.
இம்மாநாட்டிற்கான நிலத்தைச் சமன்படுத்துவதற்காக,அருகில் உள்ள மலப்பம்பாடி ஏரியிலிருந்து (சர்வே எண்:58) சுமார் 12 ஏக்கர் பரப்பளவில், 10 முதல் 23 அடி (3 முதல் 7 மீட்டர்) ஆழத்திற்கு மண்ணை சட்டவிரோதமாகத் தோண்டி எடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் எவ வேலு மற்றும் அவர் மகன். இது நவம்பர் மற்றும் டிசம்பர் 2025 காலகட்டத்தில் நடந்துள்ளது.
தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் 1959 (Rule 12(2))-ன் படி, பொதுப் பயன்பாட்டிற்காக ஏரிகளில் மண் எடுக்க 1 மீட்டருக்கு மேல் அனுமதி அளிக்க சட்டத்தில் இடமில்லை. ஆனால், இங்கு முன்னாள் அமைச்சரின் செல்வாக்கைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக 3 முதல் 7 மீட்டர் ஆழம் வரை லாரிகளில் மண் அள்ளப்பட்டு, அப்போதைய அமைச்சரின் மகனின் நிலம் சமன்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் அரசுக்கு எட்டு கோடி ரூபாய்க்கு மேல் இழப்பும், விவசாயத்திற்கு பாதிப்பும் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அறப்போர் இயக்கம் இந்த ஏரியை நேரடியாக ஆய்வு செய்து ஏற்பட்டுள்ள இழப்பை ஆவணம் செய்துள்ளது. கிட்டத்தட்ட 45 லட்சம் கன அடி மண் திருடப்பட்டு கிட்டத்தட்ட ரூபாய் எட்டு கோடிக்கு மேல் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மாநாட்டிற்கு வரும் கூட்டத்திற்கு ஏதுவாக, மலப்பம்பாடி ஏரியின் கரை மீது அணுகுசாலை அகலமாக பெரியளவில் அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் வேலுவின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தின் வாயில் வரை நெடுஞ்சாலைத் துறை மூலம் சட்டவிரோதமாக அணுகுசாலை அமைக்கப்பட்டுள்ளது. இது தமிழ்நாடு பாசனக் குளங்கள் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அகற்றுதல் சட்டம், 2007-க்கு முற்றிலும் எதிரான குற்றச் செயலாகும்.
பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் புகார் அளித்தும் பயனில்லை. இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டு அதிகாரிகளிடம் உழவர் உரிமை இயக்கம் நவம்பர் 25 2005 இல் புகார் அளித்தது. ஆனால் ஆட்சியர், தாசில்தார், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் அப்போதைய அமைச்சர் எவ வேலு மற்றும் அவரது மகன் சட்டவிரோதமாக மண் திருடுவதற்கும் அவர்கள் சொத்து சேர்ப்பதற்கும் வழிவகை செய்துள்ளது.
ஒரு சென்ட் நிலமே 1.5 முதல் 2 லட்சம் வரை விலை போகிறது என்று மக்கள் சொல்கிறார்கள். அப்படி இருக்க 124 ஏக்கர் நிலத்தை எப்படி வெறும் 46 கோடிக்கு நெடுஞ்சாலை துறை ஒப்பந்தத்தாரிடமே அப்போதைய நெடுஞ்சாலை துறை எவ வேலு மகன் 2024 இல் வாங்கினார் என்பது குறித்தும் பண பரிவர்த்தனை குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.” என்று தெரிவித்து இருக்கிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




