கொரோனாவை காலி செய்ய சிறப்பு குழுக்கள்..! இது சென்னை நிலவரம்…!
கொரோனாவை கட்டுப்படுத்த மண்டலங்கள் வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதனை எதிர்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்கி உள்ளது. சென்னையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தி உள்ள கொரோனா பரவலை கட்டுப்படுத்த மண்டல வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இதுபற்றி சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது: வட சென்னையில் தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர். நாடு முழுவதும் நடத்தப்படும் பரிசோதனைகளை விட தமிழகத்தில் அதிகளவில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தில் 10 லட்சத்தில் 4 ஆயிரம் பேருக்கு பரிசோதனை நடத்தப்படுகிறது.
வடசென்னையில் மக்கள் நெருக்கம் அதிகம் இருப்பதால் கொரோனா பரவலும் அதிகமாக உள்ளது. சென்னையில் பாதிப்பு அதிகம் உள்ள 3 மண்டலங்களில் 10 நாட்களில் கொரோனா பரவல் குறைய வாய்ப்பு உள்ளது. நோய் தொற்றை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதால் நிச்சயம் பலன் இருக்கும்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மண்டல வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதிக பாதிப்பு உள்ள 3 மண்டலங்களில் கண்காணிப்புக்காக 40 பேர் கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றன. கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் வயதானவர்களுக்கு உதவ தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இதேபோன்று, சீல் வைக்கப்பட்ட பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றார் அவர்.







