ரத்தன் டாடா ஆத்மா சாந்தியடைய சர்வ மத குருமார்கள் பிரார்த்தனை..!
மறைந்த தொழிலதிபரான ரத்தன் டாடாவின் ஆத்மா சாந்தியடைய அவரது இறுதி சடங்கின்போது சர்வமத தலைவர்கள் பிரார்த்தனை நடத்தினர். இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.
டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாடா உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 86. மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையான மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் டாடாவின் உயிர் பிரிந்தது. அவரின் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இருந்து ரத்தன் டாடாவின் உடல் கொலாபாவில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வசதியாக அவரது உடல் மும்பையில் உள்ள கலை நிகழ்ச்சிகளுக்கான தேசிய மையமான மும்பை NCPA வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
ரத்தன் டாடா உடலுக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டது. இறுதிச் சடங்கின்போது ரத்தன் டாடாவின் ஆத்மா சாந்தியடைவதற்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ, சீக்கிய, பார்சி உள்ளிட்ட அனைத்து மத குருமார்கள் பிரார்த்தனை நடத்தினர்.



