--- --:--:-- --

என்னைத் திட்டிய இளைஞர்களை நான் மன்னித்து விட்டேன் – பிரதமர் மோடி

3

நீட் போராட்டத்தில் தன்னை பற்றி அவதூறாக பேசிய மாணவர்களை மன்னித்து விட்டதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற நொய்டாவைச் சேர்ந்த பெண், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது தாயார் குறித்து அவதூறாக பேசியதாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

 

 

இந்நிலையில், நீட் விவகாரம் தொடர்பாக 5வது முறையாக வீடியோ வெளியிட்டு பேசிய பிரதமர் மோடி, டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தின் போது தன்னையும், தன் தாய் பற்றியும் அவதூறாக பேசிய மாணவர்களை மன்னிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், மாணவர்கள் மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்திற்கு இழுப்பதை விட, அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் எனவும், தான் கூறுவதை சமூகமும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துவதாகவும் தெரிவித்தார். நாட்டு மக்களுக்காகவே தான் வாழ்வதாகவும், இளைஞர்களின் முன்னேற்றமே தனது கனவும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

 

 

பிரதமர் மோடி அந்த வீடியோவில், “ஜந்தர் மந்தரில் நடந்ததை நாடு முழுவதும் உலகமே பார்த்துள்ளது. வழிதவறிய சில இளைஞர்கள், எந்தவொரு நாகரிக சமூகத்திற்கும் பொருந்தாத மிகவும் இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். அவர்கள் என்னையும், எனது மறைந்த தாயாரையும் கூடத் திட்டினார்கள். இளைஞர்கள் அடிக்கடி தவறுகள் செய்வதுண்டு. கடுமையான நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவர்கள் திருந்துவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

 

 

அவர்கள் எத்தகைய மனநிலையில் இருந்தார்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் இன்று நான் சொல்ல விரும்புவது என்னவென்றால், குழந்தைப் பருவத்திலும் இளமைப் பருவத்திலும் தவறுகள் ஏற்படுவது சகஜம். மேலும், வாழ்க்கையின் அந்தக் கட்டத்தில், மக்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் வாய்ப்பு கிடைக்கிறது. இளமையாக இருப்பதன் அர்த்தமே அதுதான்.

 

நான் அவர்களை மன்னிக்க விரும்புகிறேன். சமூகமும் எனது இந்த வேண்டுகோளை ஏற்கும் என்று நம்புகிறேன். ஏனென்றால், சில சமயங்களில் நமது நாக்கு பற்களுக்கு இடையில் மாட்டிக்கொள்கிறது என்று நான் நம்புகிறேன். இரத்தம் வரலாம், ஆனால் பற்கள் உடைவதில்லை. ஏனெனில், பற்களும் நாக்கும் நம்முடையவை. அதுபோலவே, இந்தக் குழந்தைகளும் நம்முடையவர்களே. அவர்களுக்கு வழிகாட்டுவது நமது கடமை.

 

சட்ட நடவடிக்கை மட்டும் எடுப்பதால் பிரச்சினை தீராது. அவர்களைத் தண்டிப்பதோ, நீதிமன்ற வழக்குகளுக்கு இழுப்பதோ, அல்லது அவர்களது குடும்பத்தினரைத் துன்புறுத்துவதோ நிலைமையை மாற்றிவிடாது. இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் தங்கள் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

Leave a Reply

Right Menu Icon