திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வழங்கிய கொரோனா நிதியை நிராகரிப்பதா? அரசியல் சூழ்ச்சி செய்யும் நேரமா இது? தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக அரவக்குறிச்சி திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜி வழங்கிய நிவாரண உதவியை முதலில் ஏற்று பின்னர் நிராகரித்ததற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது. இதற்கு சிகிச்சை வழங்க அரசு மருத்துவமனைகளில் போதிய வசதிகள் இல்லாத நிலை இருந்தது. இதனால், மருத்துவமனைகளில் கொரோன தடுப்பு பணிகளுக்காக உபகரணங்கள் வாங்கவும், முக்ககவசம், கிருமி நாசினி, கானி டைசர் போன்றவற்றை வாங்கவும் எம்.பி.,எம் எல் ஏக்கள் பலரும் தங்களது தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி மூலம் நிதி ஒதுக்கீடு செய்து வருகின்றனர்.
இது போல் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி தனது தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் கரூர் மாவட்ட தலைமை மருத்துவமனைகளுக்கு, கடந்த மார்ச் 27-ந் தேதி ரூ 1.03 கோடி நிதியை ஒதுக்கியிருந்தார். இதில் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெண்டிலேட்டர் வாங்க மட்டும் ரூ.60 லட்சம் ஒதுக்கியிருந்தார். இந்த நிதி ஒதுக்கீடு பட்டியலை கரூர் மாவட்ட ஆட்சியரிடம் செந்தில் பாலாஜி வழங்க, இதற்கு முதலில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், 4 நாட்கள் கழித்து கரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்ட ரூ .60 லட்சம் நிதியை ஏற்க மறுத்து நிராகரித்துள்ளது மாவட்ட நிர்வாகம் . இதற்கு கூறப்பட்ட காரணம், எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை தொகுதிக்கு வெளியே செலவழிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. இதனால், எதிர்க்கட்சி எம்எல்ஏ ஒதுக்கிய நிதியை நிராகரித்துள்ள இந்த விவகாரம் இப்போது சர்ச்சையாகியுள்ளது.
இப்படி, முதலில் நிதி ஒதுக்கியதை ஏற்றுக் கொண்டு, பின்னர் நிராகரித்துள்ளதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கொகோனாவால் பாதிக்கப்பட்ட அரவக்குறிச்சி தொகுதி மக்களும் கரூர் மாவட்ட மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் அந்த மருத்துவமனையில் வெண்டிலேட்டர் கருவி தட்டுப்பாடு நிலவுவதை அறிந்தே செந்தில் பாலாஜி ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
ஆனால் அந்த நிதியை நிராகரித்து, இந்த கொரோனா பாதிப்பு நேரத்திலும் அரசியல் செய்வது கண்டனத்திற்குரியது. உடனடியாக செந்தில் பாலாஜியின் பரிந்துரையை ஏற்று வெண்டிலேட்டர் கருவிகளை வாங்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






