இயல்பு நிலைக்கு திரும்பியது சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை..!
சென்னையில் புறநகர் மின்சார ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். எழும்பூர் ரயில் நிலையத்தில் 10 மற்றும் 11ஆவது நடைமேடைகளில் மறுசீரமைப்பு பணிகள் கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி முதல் நடைபெற்று வந்தன. இதன் காரணமாக ஏப்ரல் 5ஆம் தேதி வரை 5 மற்றும் 6 ஆகிய நடைமேடைகள் வழியாக புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
அதோடு, எழும்பூர் வழியாக 204 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பாதியாக குறைக்கப்பட்டது. ரயில் சேவைகள் குறைப்பால் தினந்தோறும் பணிக்கு செல்லும் லட்சக்கணக்கான மக்கள் கடும் இன்னலை சந்தித்து வந்தனர். தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும், பெரிதாக பலனளிக்கவில்லை.
இந்நிலையில், நடைமேடை பணிகள் நிறைவடைந்ததால் வரும் 5ஆம் தேதி முதல் மின்சார ரயில்கள் சேவை சீராகும் எனக் கூறப்பட்டது. திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே பணிகள் முடிந்து இன்று முதல் ரயில் சேவை சீரானதால் பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.





