உள்ளாட்சித் தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் பதவியேற்க தடையில்லை..!! திமுக மனுவை நிராகரித்தது உயர்நீதிமன்றம்..!!
உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினரை பதவி ஏற்க அனுமதிக்கக் கூடாது என திமுக தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
நாமக்கல், திருவாரூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது. திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றதை மோசடி செய்து அதிமுக வெற்றி பெற்றதாக அறிவித்துள்ளதாகவும் திமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்த 5 மாவட்டங்களில் அதிமுக சார்பில் வெற்றி பெற்றவர்களை பதவி ஏற்க அனுமதிக்கக் கூடாது என நேற்று உயர் நீதிமன்ற நீதிபதி ஆதிகேசவலு வீட்டில் திமுக தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அனுமதி இல்லாமல் விசாரிக்க முடியாது என நீதிபதி ஆதிகேசவலு மறுத்துவிட்டார்.
இந்நிலையில் இன்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன், திமுக சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க முடியாது என்றும், வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்பதை தடுக்க முடியாது எனவும் தலைமை நீதிபதி தெரிவித்து முறையீட்டை நிராகரித்தார்.
இது தொடர்பாக வழக்கமான நீதிமன்றத்தில் முறைப்படி வழக்கு தொடரலாம் என தலைமை நீதிபதி அறிவுரை வழங்கி திமுகவின் முறையீட்டை நிராகரித்தார்.





