ரயிலில் கட்டுக் கட்டாக சுமார் 4 கோடி ரொக்கம் பறிமுதல்..!
சென்னை தாம்பரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி நெல்லை விரைவு ரயிலில் கொண்டு செல்லப்பட்ட சுமார் 4 கோடி ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
வாக்கிற்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினர் தமிழ்நாடு முழுவதும் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்தவகையில் சென்னையில் இருந்து நேற்றிரவு நெல்லை விரைவு ரயிலில் கட்டுக்கட்டாக பணம் கொண்டு செல்லப்படுவதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில், தாம்பரம் ரயில் நிலையத்தில், நெல்லை விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, கொளத்தூர் திருவிக நகரை சேர்ந்த சதீஷ், அவரது சகோதரர் நவீன், மற்றும் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த பெருமாள் ஆகிய 3 பேர் கொண்டு சென்ற பைகளில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், வாக்காளர்களுக்கு சட்டவிரோதமாக பணம் கொடுக்க முயன்றதாக கூறி, 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பணம் கொண்டு செல்லப்பட்டவர்களில், ஒருவர் திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உறவினர் என்பதால், அவருக்காக தேர்தலில் செலவு செய்ய இப்பணம் கொண்டு செல்லப்பட்டதா என விசாரணை நடைபெறுகிறது.
மேலும் இது தொடர்பாக நைனார் நாராகேந்திரனுக்கு சொந்தமான புரசைவாக்கத்தில் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் காவல்துறையினர் நேற்று இரவிலிருந்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.





