பள்ளி மாணவியை கடத்தி பணம் பறிக்க முயற்சி..!
சென்னையில் பள்ளி மாணவியை கடத்தி பெற்றோரிடம் பணம் பறிக்க சென்ற சம்பவத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு இரண்டு மணி நேரத்தில் மாணவியை பத்திரமாக மீட்டனர். சென்னை வடபழனியை சேர்ந்த முகமது என்பவரது மகள் ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளியிலிருந்து வெளியே வந்த மாணவியிடம் பெண் ஒருவர் தாயின் தோழி எனக் கூறி மாணவியை ஆட்டோவில் கடத்தி சென்றுள்ளார். பின்னர் அந்த மாணவியின் பெற்றோரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 10 லட்சம் ரூபாய் கேட்டு அந்தப் பெண்மணி மிரட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். மீண்டும் தொலைபேசியில் தொடர்பு கொண்ட அவரிடம் 2 லட்சம் ரூபாய் தருவதாக பெண்ணின் பெற்றோர் கூறினர்.
இதனிடையே செல்போன் எண் மூலம் இடத்தை உறுதி செய்த போலீசார் வடபழனி நூறடி சாலை சுற்றித்திரிந்த பெண்மணியை கைது செய்ததோடு அந்த மாணவியையும் மீட்டனர்.





