பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை உயிரிழப்பு..! பெண் சிசுக் கொலையா..?
நாமக்கல் அருகே பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை இறந்த நிலையில் பெண் சிசுக்கொலை ஆக இருக்குமோ என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை சேர்ந்த சூர்யா கஸ்தூரி தம்பதியினருக்கு கடந்த 4ஆம் தேதி நாமக்கல் அரசு மருத்துவமனையில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனையடுத்து கஸ்தூரி தனது குழந்தையுடன் தாய் வீடான ஓட்டேரி பகுதியில் தங்கியுள்ளார்.
கடந்த 12ம் தேதி குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாக கூறி சடலத்தை அந்த பகுதியிலேயே உறவினர்கள் புதைத்துள்ளனர்.
குழந்தையின் இறப்பு குறித்து சந்தேகம் எழுந்ததையடுத்து வட்டார மருத்துவ அலுவலர் லலிதா எருமப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து காவல்துறையினர் உடலை தோண்டி எடுத்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






