தவெக பூந்தமல்லி வேட்பாளர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார்..!
தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் பங்கேற்ற நிகழ்ச்சியில் அந்த கட்சியின் பெண் நிர்வாகிக்கு பாலியல் சீண்டல் அளித்ததாக பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசம் (எ) குட்டி மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் தெற்கு மாவட்ட தவெக செயலாளராக இருப்பவர் பிரகாசம் என்கிற குட்டி. தவெக வேட்பாளர் பட்டியலை அந்த கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட போது பிரகாசம் என்கிற குட்டி பூந்தமல்லி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு திருவள்ளூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தவெக மாநில பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்து கொண்டார். திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் பிரகாசம் என்கிற குட்டி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
அப்போது மகளிர் அணி நிர்வாகி ஒருவரை பிரகாசம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து த.வெ.க தலைமைக்கு அந்த பெண் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுப்பதாக கூறி நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பெண் தனது கணவருடன் வருகை தந்து பாலியல் சீண்டல் அளித்த தவெக வேட்பாளர் பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் கொடுத்திருந்தார். அவர் புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர் போலீசார் குட்டி என்ற பிரகாசம் மீது 6 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கியுள்ளனர்.
புகார் அளித்த பெண்ணிடம் முதல் கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதன் பின்னர் பூந்தமல்லி தவெக வேட்பாளர் பிரகாசமிடம் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவி கொடுக்கவில்லை என்பதால்தான் தனது கணவர் மீது பொய்யான புகார் பெண் அளித்துள்ளதாக அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பிரகாசம் மனைவி நேற்று மாவட்ட எஸ் பி அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





