அண்ணா சிலைக்கு தீ வைப்பு… மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலை எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி அருகே அண்ணா சிலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். தீ வைத்த நபரை கைது செய்யக்கோரி பலர் திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அண்ணா சிலை எரிப்புக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், தமிழ்நாடு என்று இந்த மாநிலத்திற்குப் பெயர் சூட்டிய தமிழ்த்தாயின் தவப்புதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையைக் கள்ளக்குறிச்சி அருகே மாதவச்சேரியில் கொடூர எண்ணம் கொண்டோர் தீ வைத்துக் கொளுத்தியுள்ளது கடுமையான கண்டனத்திற்குரியது.
அமைதி தவழும் தமிழகத்தை வன்முறைக்காடாக்க நினைக்கும் சக்திகளைத் தமிழக மக்கள் அடையாளம் கண்டு ஜனநாயக ஆயுதத்தால் நிச்சயம் தண்டிப்பார்கள். அண்ணாவின் பெயரை லேபிளாகக் கொண்ட கட்சி ஆட்சி செய்யும் மாநிலத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவின் சிலைகள் மட்டுமின்றி, அ.தி.மு.க.வின் நிறுவனரான மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். சிலைகளும் சிதைக்கப்படுகின்றன.
இத்தகைய வன்முறைப் போக்கை ஒடுக்க வக்கின்றி, எதிர்க்கட்சிகளை வக்கணை பேசிக் கொண்டிருக்கும் முதலமைச்சர் உள்ளிட்டவர்களின் போக்கு வெட்கக்கேடானது என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




