--- --:--:-- --

ஜூன் 18-ல் ராஜ்யசபா இடைத்தேர்தல்

10

மிழக அரசியல் களம் எப்போதும் பரபரப்புகளுக்குப் பஞ்சம் இல்லாத ஒன்று. அந்த வகையில், தற்போது புதிய திருப்பமாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கட்சிக்கு நாடாளுமன்றத்தில் தனது முதல் பிரதிநிதியைப் பெறுவதற்கான ஒரு அரிய வாய்ப்பு உருவாகியுள்ளது. சமீபத்தில் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க சார்பில் மயிலம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு சி.வி.சண்முகம் வெற்றி பெற்றார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி ஒருவர் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகளை வகிக்க முடியாது என்ற விதிகள் உள்ளன. சி.வி.சண்முகம் ஏற்கனவே மாநிலங்களவை (ராஜ்யசபா) உறுப்பினராகப் பதவி வகித்து வந்ததால், தனது எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்ய வேண்டியதாயிற்று.

 

இதற்கான ராஜினாமா கடிதத்தை மாநிலங்களவை தலைவரும், இந்திய குடியரசுத் துணைத்தலைவருமான சி.பி. ராதாகிருஷ்ணனிடம் அவர் நேரில் வழங்கினார். இதனைத் தொடர்ந்து, மாநிலங்களவை செயலகம் மூலம் அவரது ராஜினாமா கடிதம் பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தத் தகவல் இந்திய தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

 

 

தற்போது இந்த இடத்தையும் சேர்த்து தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் காலியாக உள்ள தலா ஒரு இடத்திற்கான இடைத்தேர்தல் அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதற்கான தேர்தல் அட்டவணையின்படி, ஜூன் 1-ஆம் தேதி முதல் வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 8 ஆகும். அதனைத் தொடர்ந்து ஜூன் 9-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெறும் என்றும், வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஜூன் 11 கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

இறுதியாக, ஜூன் 18-ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே மாலை 5 மணிக்கு வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் உடனுக்குடன் அறிவிக்கப்படவுள்ளன.

 

 

இந்த இடைத்தேர்தல் அறிவிப்பு தவெக தரப்பில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய சூழலில் 107 எம்.எல்.ஏ-க்களைப் பெற்றுள்ள தவெகவிற்கு, இந்த மாநிலங்களவை இடைத்தேர்தல் மூலம் நாடாளுமன்றத்தில் தங்களது ‘முதல்’ எம்பியை (MP) அனுப்புவதற்கான பிரகாசமான வாய்ப்பு கனிந்து வந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ஜூன் 18-ல் நடக்கவிருக்கும் இந்த தேர்தல் களம் தவெகவிற்கு ஒரு முக்கிய மைல்கல்லாக அமையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon