அடுத்த 3 மணி நேரத்திற்கு வெளுக்கப்போகும் மழை..!
தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு சென்னை உட்பட 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாளை வடமேற்கு மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும்.
மேலும், இன்று வட தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், தென் தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் திருவள்ளூர், ராணிப்பேட்டை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிபேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், நீலகிரி, கோயம்புத்தூர், கரூர், திருப்பூர், தேனி, தென்காசி மற்றும் திருநெல்வேலி ஆகிய 17 மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்று பிற்பகல் 1 மணி வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.





