தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் மழை வெளுக்கும்..!
மதுரை, விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தெற்கு உள் கர்நாடகா முதல் மன்னார் வளைகுடா வரை தமிழ்நாடு பகுதிகள் வழியாக ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல, கடலூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களிலும், மதுரை, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் இன்று பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளது.
மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் நாளை மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ள வானிலை மையம், தமிழ்நாட்டின் தென் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் கணித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் இன்று மாலை அல்லது இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி ஃபாரன்ஹீட் வரை பதிவாகும் என்றும் தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




