திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்களுக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்..!
திருச்சி, மதுரையில் புதிய டைடல் பூங்காக்கள் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். திருச்சி பஞ்சப்பூரில், பேருந்து நிலையத்துக்கு அருகில் 315 கோடி ரூபாய் மதிப்பில் 14 புள்ளி 16 ஏக்கரில் டைடல் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோன்று மதுரையில் மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் 289 கோடி ரூபாய் மதிப்பில் சுமார் 10 ஏக்கரில் டைடல் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு டைடல் பூங்கா கட்டுமான பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் டைடல் பூங்காக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.தரைத்தளம் மற்றும் ஆறு தளங்களுடன் திருச்சியில் புதிய டைடல் பூங்கா அமைய உள்ளது. இதன் மூலம் சுமார் 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது.
அதேபோல் தரை மற்றும் 12 தளங்களுடன் மதுரையில் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த டைடல் பார்க்கில் 5,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக சிறந்த 10 கைவினை கலைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 65 வயதுக்கு மேற்பட்ட 99 கைவினை கலைஞர்களுக்கு ‘வாழும் கைவினை பொக்கிஷம்’ விருதுகள் வழங்கப்பட்டன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




