வருமானவரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி உயிரிழப்பு..!
சென்னை வில்லிவாக்கத்தில் வருமானவரித்துறை அதிகாரியின் கார் மோதி கர்ப்பிணி ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னை வில்லிவாக்கம் ரங்கதாஸ் காலனியில் வசித்து வந்த 4 மாத கர்ப்பிணியான கௌசிபி பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்று விட்டு மகிழ்ச்சியோடு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் அந்த மகிழ்ச்சி அவருக்கு நீடிக்கவில்லை. ஜானகிராமன் ரெட்டி 1வது பிரதானசாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவர் மீது எதிர்பாராதவிதமாக அதி வேகமாக வந்த கார் ஒன்று பின்னால் மோதியுள்ளது. இந்த விபத்தில் சில அடி தூரம் தூக்கி வீசப்பட்ட கர்ப்பிணி நிகழும் இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
ஏற்கனவே ஒன்றரை வயதில் மகன் இருக்கும் நிலையில் கௌசிபியின் உயிரிழப்பு அவரது கணவரை நிலைகுலைய வைத்துள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த பெண் சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற நிலையில் அந்த கார் வருமான வரித் துறைக்கு சொந்தமானது என விசாரணையில் தெரியவந்துள்ளது.
வருமானவரித் துறை அதிகாரியின் உறவினராக இருக்கக்கூடிய ரூபா என்பவர் காரை ஓட்டி வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள ரூபாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.






