தவெக ஆதரவு.. சிபிஎம் நிலைப்பாடு என்ன?
நாளை நடைபெறும் தவெக தோழமைக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது என அக்கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த பெ.சண்முகம், “சட்டமன்றம் சட்டமன்றமாக நடைபெற வேண்டும். அங்கு மக்களின் பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு அதற்கான தீர்வுகள் எட்டப்பட வேண்டும். அதைத் தவிர கத்தல் மன்றமாக நடத்துவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
குறிப்பாக சட்டமன்றம், சண்டை மன்றமாக மாற்றிக் கொண்டு வருகிறது. ஆளுங்கட்சி என்கின்ற முறையில் சட்டமன்ற மரபுகளுக்கு உட்பட்டு அதனை வழிநடத்தக்கூடிய ஒரு கூடுதல் பொறுப்பு தமிழக வெற்றிக்கழக உறுப்பினர்களுக்கு உள்ளது. தற்போது மக்கள் ஒவ்வொரு நடவடிக்கையையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டு வருகிறார்கள். இப்படிதான் சட்டமன்றம் நடக்கும் என்றால் இப்படிப்பட்ட சட்டமன்றம் வேண்டாம் என்கின்ற ஒரு நோக்கினை மக்களிடம் கொண்டு வரக்கூடாது.
சட்டமன்றம் என்பது மக்களின் வரிப்பணத்தில் தான் நடக்கிறது தவிர அவர்களது சொந்த பணத்தில் நடக்கவில்லை. குறிப்பாக அவரவருக்கு வழங்கக்கூடிய நேரத்தினை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர அதை தாண்டி நேரத்தை விரயம் ஆக்கக் கூடாது. இந்தியாவில் ஊழலுக்கு எதிராக போராடிய கட்சிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர்த்து வேறு கட்சிகள் பெரும்பங்கு உள்ளதா என்பதை அவர்கள் கூற வேண்டும்.
தவெக அரசுக்கு 5 ஆண்டுகள் ஆதரவு கொடுப்போம் என்பதை உறுதியாக சொல்ல முடியாது. அரசின் பொருளாதார மற்றும் அரசியல் கொள்கை, தொழிலாளர்கள் சார்ந்த போக்கின் அடிப்படையிலேயே ஆதரவு இருக்கும். வெளியில் இருந்து தவெக அரசுக்கு ஆதரவு தொடரும். நாளை நடைபெறும் தவெக தோழமைக் கட்சிக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் பங்கேற்காது. புதிய கூட்டணி உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாளை நடைபெறும் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்.
3 ஃபைல் தன்னுடைய டேபிளில் இருப்பதாக முதலமைச்சர் கூறினார். ஏன் அதை பற்றி பேசாமல் சம்பந்தமே இல்லாமல் 50 ஆண்டுகள் முன் நடந்த சர்க்காரியா கமிஷன் பற்றி பேச வேண்டும். திசை திருப்புகிற தந்திரம் இது. அமைச்சர்கள் எல்லாம் முதலில் படிங்க. திமுக மேல் உள்ள கோபத்தில் வரலாறு தெரியாமல் சகட்டு மேனிக்கு பேசக் கூடாது. மிசா பற்றி அமைச்சர் நிர்மல் பேசியது சிறுபிள்ளைத்தனமானது.
மிசா கொடுமைகள், கைதானவர்கள் பற்றிய தெளிவான விவரங்கள் இஸ்மாயில் கமிஷன் அறிக்கையில் இருக்கு. பேரவையில் உறுப்பினர்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் சம்பந்தம் சம்பந்தம் இல்லாமல் பேசுகிறார் முதலமைச்சர். அவையில் எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்கு கூட முதலமைச்சர் பதில் அளிக்கவில்லை. எப்போதும் இப்படி நடந்தது கிடையாது. ‘நாங்கள் நினைத்ததை எல்லாம் பேசுவோம்’ என அவையை பயன்படுத்துவதை நாங்கள் ஏற்கவில்லை.” எனக் கடுமையாக விமர்சித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




