பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு..!
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் எல் கே அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி, முன்னாள் உத்தரப்பிரதேச முதலமைச்சர் கல்யாண் சிங், வினய் கட்டியார் உட்பட 32 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
28 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்து தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. வழக்கு தொடர்பாக இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த 16ஆம் தேதி அறிவித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ் கே யாதவ் தீர்ப்பின்போது குற்றம் சாட்டப்பட்ட 32 பேரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.
இதில் உமா பாரதியும், கல்யாண் சிங்கம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராவார்களா என்பதும் தெரியவில்லை. முன்னதாக ஆகஸ்டு 31ஆம் தேதிக்குள் வழக்கை முடித்து தீர்ப்பு வழங்கும் படி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கெடு விதித்திருந்தது.
அதன்பின் சிபிஐ நீதிமன்றம் கேட்டுக் கொண்டதற்கிணங்க மேலும் ஒரு மாதம் கெடு நீட்டிக்கப்பட்டது. இதனால் தினசரி இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. மொத்தமாக 351 சாட்சியங்கள் ஆதாரங்களாக 600 ஆவணங்கள் ஆகியவற்றை நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்திருந்தது.
முதல்கட்டமாக 48 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில் விசாரணையின் போதே 17 பேர் உயிரிழந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.






