சுபஸ்ரீ வழக்கில் ஜெயகோபாலுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர்நீதிமன்றம்

சென்னை புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய மருத்துவமனைகளுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் நிதி வழங்க வேண்டும் என்ற நிபந்தனையோடு சுபஸ்ரீ வழக்கில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் செய்ய ஜெயகோபாலுக்கு நிபந்தனை பிணை வழங்கப்பட்டுள்ளது.

 

சென்னை பள்ளிக்கரணையில் செப்டம்பர் 12ஆம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த விழுந்த விபத்தில் சிக்கி சுபஸ்ரீ என்ற பெண் உயிரிழந்தார். அதனையடுத்து பேனர்கள் வைத்த ஜெயகோபாலும், அவரது உறவினர் மேகநாதனும் செப்டம்பர் 27ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

 

இருவரும் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்தது. இருவரும் மீண்டும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். மனு விசாரணைக்கு வந்தபோது சம்பந்தப்பட்ட இருவரும் 45 நாட்களுக்கு மேலாக சிறையில் இருப்பதாகவும் எந்த நிபந்தனைகள் விதித்தாலும் பின்பற்றத் தயாராக இருப்பதாகவும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

 

இந்த விவகாரத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக இரு நீதிபதிகள் அமர்வில் தெரிவிக்கப்பட்டிருந்தது குறித்து அரசு தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கார்த்திகேயன் கேள்வி எழுப்பினார். குற்றப்பத்திரிக்கை பரிசீலனையில் இருப்பதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

 

அதனை ஏற்ற நீதிபதி ஜெயகோபால் மற்றும் மேகநாதனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கினார் .ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் சென்னை புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு தலா 25 ஆயிரம் வழங்க ஜெயகோபாலுக்கு உத்தரவிடப்பட்டது.

 

மேலும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து சம்மன் வரும் வரை மதுரையில் தங்கியிருந்து அங்குள்ள காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.

 

சமன் கிடைத்ததும் பள்ளிக்கரணை காவல் துறையினர் முன் ஆஜராக வேண்டும் என்றும், ஜெயகோபாலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையோடு மேகநாதனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.


Leave a Reply