நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்யததாக தேனி மருத்துவ கல்லூரியை சேர்ந்த மாணவர் உதித் சூர்யா என்பவர் சிக்கினார். இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான ஆவணங்களை சரிபார்க்கும் படி சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
அதன் அடிப்படையில் கோவையில் உள்ள கோவை அரசு மருத்துவக் கல்லூரி , பி.எஸ்.ஜி மருத்துவ கல்லூரி, ஈ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி ஆகிய கல்லூரிகளில் முதலாம் ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. இதில் பி.எஸ்.ஜி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு சேர்க்கப்பட்ட மாணவர்கள் இருவரின் ஆவணங்களில் உள்ள புகைப்படங்கள் வேறு வேறாக இருப்பது தெரியவந்துள்ளது.
ஒரு மாணவர் மற்றும் மாணவி ஆகிய இருவரின் புகைப்படங்கள் வேறு வேறாக இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து பி.எஸ்.ஜி. கல்லூரி நிர்வாகம் இது குறித்து மருத்துவ கல்லூரி இயக்குனர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தும்படி சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனரகம் உத்தர விட்டது.
காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவர் ஒருவரின் புகைபடமும், தர்மபுரியை சேர்ந்த மாணவி ஒருவரின் புகைப்படமும் மாறி இருப்பதும் அவர்கள் சி.பி.எஸ்.சி.பிரிவில் படித்து தேர்வு எழுதி மருத்துவ படிப்பில் சேர்ந்து இருப்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் இது குறித்து கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ கல்லூரி டீன் ராமலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்;-
அப்போது, தேனி சம்பவத்தை தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன் மருத்துவ இயக்குனரகத்தில் இருந்து எங்களுக்கு வந்த உத்தரவை அடுத்து மாணவர்களின் சான்றிதழ்களை சரி பார்த்தோம். அரசு உத்திரவுபடி
அனுமதிக்கப்பட்ட 150 மாணவர்களின் அனைத்து விதமான சான்றிதழ்களையும் அனைவரிடமும் சரி பார்த்தோம். அதில் இருவரது புகைப்படங்களில் மாறுபாடு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாகவும், நீட் அட்மிட் கார்டில் இருப்பவர் புகைப்படமும், தேர்வுக்குழு வழங்கிய அட்மிட் கார்டில் இருந்த புகைப்படமும் மாறுபட்டு இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதை தொடர்ந்து , இது தொடர்பாக இருவரது பெற்றோரையும் அழைத்து பேசி உள்ளோம்.
முறைகேடு நடந்து இருக்கிறதா இல்லையா என தேர்வுக்குழு தான் நிருபிக்க வேண்டும் என தெரிவித்த அவர், தேர்வுக்குழுவிடம் உள்ள மாணவர்களின் கைரேகைகளை கொண்டு சரி பார்க்க மாணவர்கள் இருவரும் சென்னை அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தான் மாணவர்களின் கை ரேகை இருக்கும்.மருத்துவர் படிப்பில் சேர தேர்வுகுழுவால் கொடுக்கப்பட்ட இரு மாணவர்களின் அலாட்மெண்ட் கடிதத்தில் இருந்த புகைபடமும், எங்களுக்கு கொடுக்கப்பட்ட புகைப்படமும் ஒரே மாதிரி இருக்கிறது.
தவறு நடந்திருந்தால் மருத்துவ கல்லூரி இயக்குனரகம் தான் நடவடிக்கை எடுக்கும். அவர்கள் அனுப்பிய மாணவர்களை கல்லூரியில் சேர்த்துக்கொண்டது மட்டும் தான் எங்கள் வேலை என டீன் ராமலிங்கம் தெரிவித்துள்ளார்.