தமிழகம் பக்கமே திரும்பிப் பார்க்காத ஃபனி புயலை முன்னிட்டு, தமிழக அரசுக்கு ரூ.309 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஃபனி புயல், தமிழகம் நோக்கி வரும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அது திசை மாறிச் சென்று, ஒடிசா கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று காலை சென்னைக்கு தென் கிழக்கே 880 கி.மீ தூரத்தில் இருந்தது.
தமிழகத்தை மழை மிரட்டும் என்று எதிர்பார்த்த நிலையில், எல்லாமே ‘புஸ்’ என்றாகி, ஏமாற்றமே மிஞ்சியது. ஆனால், புயல் சார்ந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக மத்திய அரசு 4 மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, தமிழகம் உள்பட 4 மநிலங்களுக்கு ரூ.1,086 கோடி நிதி ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அவ்வகையில், தமிழகத்துக்கு ரூ.309 கோடி, ஆந்திராவுக்கு ரூ.200.25 கோடி, ஒடிசாவுக்கு ரூ. 340.87 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ. 235.50 கோடியை, மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
கஜா புயலால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது. நிவாரண பணிகளுக்கு தமிழக அரசு கேட்ட தொகையில் சிறிய அளவை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியதாக குற்றச்சாட்டு இருந்தது. ஆனால், தற்போது பாதிப்பையும் ஏற்படுத்தாத ஃபனி புயலுக்கு மத்திய அரசு நிதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.