மக்களவை தேர்தலில் இன்று நான்காம் கட்டமாக, 72 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தியாவில், ஏழு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 3 கட்ட தேர்தலில் 302 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இன்று, நான்காம் கட்டமாக, 9 மாநிலங்களில் உள்ள 72 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் 12 கோடியே 79 லட்சம் வாக்காளர்கள் வாக்குரிமை பெற்றுள்ளனர். 961 வேட்பாளர்களின் அரசியல் எதிர்காலத்தை, இவர்கள் தீர்மானிக்கின்றனர். மத்திய பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 17, பீகாரில் 5, ஜார்கண்டில் 3, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் தலா 13, ஒடிசாவில் 6, மேற்கு வங்காளத்தில் 8, காஷ்மீரில் 1 தொகுதிகளில் தேர்தல் நடக்கிறது.
தேர்தலை முன்னிட்டு, உள்ளூர் போலீசாருடன் மத்திய துணை ராணுவ படையினர் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலுடன் ஒடிசா மாநில சட்டசபை தேர்தலில், 42 தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.