கோவையில், கைக்குழந்தையுடன் பஸ்சில் ஏறி, பயணிகளிடம் நகை திருட முயன்ற 4 பெண்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்; அவர்களுக்கு பெண்கள் தர்ம அடி கொடுத்தனர்.
கோவை டவுன்ஹாலில் இருந்து பேரூர் சென்று கொண்டிருந்த பஸ்சில், 4 பெண்கள் கைக்குழந்தையுடன் ஏறியுள்ளனர். கைக்குழந்தையை பார்த்ததும், உட்கார்ந்திருந்தவர்கள் எழுந்து 2 பெண்களுக்கு, அமருவதற்கு இடம் கொடுத்தனர்.
குழந்தையுடன் 2 பேர் இருக்கையில் அமர, உடன் வந்த மற்ற 2 பேரும், அவர்களுக்கு அருகிலேயே நின்று கொண்டனர். பஸ் வேகமாக சென்று கொண்டிருக்கும் போது, முன்பக்க சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம், 4 பேருமே நகையை திருட முயன்றுள்ளனர்.
இதை, மற்ற பயணிகள் பார்த்தனர்; ஆத்திரமும், கோபமும் அடைந்த அவர்கள், 4 பேரை பிடிக்க முயன்றனர். இதற்காக வைசியாள் வீதியில் பஸ் நிறுத்தப்பட்டது. ஆனால், அந்த 4 பெண்களும் பஸ்சில் இருந்து குதித்து, தப்பி ஓடினார்கள்.
ஆனாலும், சக பெண் பயணிகள் விடவில்லை; 4 பெண்களை துரத்தி ஓடி, பிறர் உதவியோடு பிடித்து தர்மஅடி கொடுக்க தொடங்கினர். பின்னர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






