ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் வென்று, தமிழகத்தின் பெருமையை நிலை நாட்டிய வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் நிதி உதவியை அறிவித்துள்ளன.
அண்மையில் கத்தார் தலைநகர் தோகாவில் ஆசிய தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில், இந்தியா சார்பில் திருச்சியை சேர்ந்த, ஏழ்மையான குடும்ப பின்னணி கொண்ட கோமதி மாரிமுத்து பங்கேற்று தங்கப்பதக்கம் வென்றார்.
அவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதற்கிடையே அரசியல் கட்சிகள், அமைப்புகள், தனி நபர்கள் நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளன. நடிகர் ரோபோ சங்கர், ரூ. 1 லட்சம் வழங்கினார்.
தற்போது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்ட அறிக்கையில், ஆசிய தடகள போட்டியில் இந்தியாவுக்கு முதலாவது தங்க பதக்கத்தைப் பெற்றுத் தந்த ஓட்டப் பந்தய வீராங்கனை கோமதிக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.