பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோருக்கு 2 லட்ச ரூபாய் நிதியுதவி..!
சாத்தூர் அருகே அச்சு குளம் கிராமத்தில் சந்தனமாரி என்பவருக்கு சொந்தமான மாரியம்மாள் பட்டாசு ஆலை உள்ளது. பேன்சி ரக வெடிகள் தயாரிக்கப்படும் இந்த ஆலையில் 30க்கும் மேற்பட்ட அறைகளில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
பட்டாசு தயாரிக்க பயன்படும் வெடி மருந்தில் உராய்வு ஏற்பட்டு அங்கு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பட்டாசுகள் வெடித்து சிதறியதில் 15க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த கோர விபத்தில் தொழிலாளர்கள் 11 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர்.
34 பேர் படுகாயங்களுடன் சாத்தூர் சிவகாசி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் கர்ப்பிணி உட்பட 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து பற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள் தீயை அணைத்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
எஸ்பி பெருமாள், சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர், பட்டாசு ஆலை வெடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி 2 லட்சம் ரூபாய் நிதி உதவியும் அறிவித்துள்ளார்.
பட்டாசு ஆலை விபத்து மிகுந்த வேதனை அளிப்பதாக கூறியுள்ளார். இந்த வேதனையான நேரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விரைவில் குணமடைய வேண்டும் என தெரிவித்துள்ள பிரதமர் சம்பவம் நடந்த பகுதியில் அதிகாரிகள் தேவையான உதவிகளை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.






