மருத்துவமனையிலிருந்து தொண்டர்களை நோக்கி கையசைத்த சசிகலா..!
உடல் நலம் பாதிக்கப்பட்டு இரண்டாவது நாளாக சிகிச்சை பெற்று வரும் சசிகலா மீண்டும் மற்றுமொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அப்போது மருத்துவமனை முன்பாக திரண்டிருந்த தொண்டர்களை நோக்கி அவர் கையை அசைத்துள்ளார்.
பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு காய்ச்சல், மூச்சுத்திணறல், உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டதால் நேற்று மாலை பரப்பன அக்ரகார மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக போரிங் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட அவருக்கு இரண்டு மணி நேரம் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
பின்னர் பொது வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில் நள்ளிரவு ஒரு மணியளவில் மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மீண்டும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு ஆக்சிஜன் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்த அவருக்கு ராபிட் மற்றும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரொனா நெகட்டிவ் என்று முடிவு வெளியானது. இருப்பினும் அவரது உடல்நிலை குறித்து எழுத்துப்பூர்வமான அறிக்கை வெளியிடப்படவில்லை.
சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யவில்லை என்று உறவினர்கள் குற்றம் சாட்டி வந்தனர். மேலும் மருத்துவமனையில் சிடி ஸ்கேன் உள்ளிட்ட வசதிகள் இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் சிடி ஸ்கேன் எடுப்பதற்காக அரசு மருத்துவமனையில் இருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு சசிகலா மாற்றப்பட்டார். அப்போது வீல் சேரில் வெளியே அழைத்து வரப்பட்ட சசிகலா அங்கு திரண்டிருந்த தொண்டர்களை நோக்கி கையசைத்தார்.







