டெல்லி காட்சிகள் அதிர்ச்சியளிக்கிறது: உதயநிதி கண்டனம்
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக அமைதியான முறையில் பேரணி நடத்திய சி.ஜே.பி அமைப்பின் இளைஞர்கள் மீது காவல்துறை நடத்திய அராஜகத் தாக்குதலுக்குத் தமிழக துணை முதலமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
டெல்லியிலிருந்து வரும் காட்சிகள் மிகவும் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், இளைஞர்களின் நியாயமான கவலைகளுக்குப் தீர்வு காண்பதற்குப் பதிலாக, மத்திய அரசு தனது போலீஸ் படையைக் கொண்டு ஒடுக்க நினைப்பது ஒரு ஜனநாயக நாட்டில் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்று சாடியுள்ளார்.
மேலும், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதைச் சுட்டிக்காட்டிய உதயநிதி, இன்று நீட் தேர்வுக்கு எதிரான தமிழ்நாட்டின் குரல் நாட்டின் தலைநகர் டெல்லி உட்பட தேசம் முழுவதும் எதிரொலிப்பதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் ஒட்டுமொத்த இளைஞர்களின் கோரிக்கை என்னவென்று தெளிவாகத் தெரிந்துவிட்டதால், மத்திய அரசு இனியாவது அவர்களின் குரலுக்குச் செவிசாய்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.






