பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!
வங்கக் கடலில் உருவாகிய ‘ஃபெஞ்சல்’ புயலின் காரணமாக தமிழ்நாட்டின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் அதி கன மழை பொழிந்தது. இதன் காரணமாக மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளும் வெள்ளக்காடாக காட்சி அளித்தன. சில இடங்களில் ஏரியும் ஆறும் நிரம்பி உபரி நீர் வெளியேறியதால் குடியிருப்பு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.
வெள்ளப்பாதிப்பைத் தொடர்ந்து பாதிப்புக்குள்ளான பகுதியில் அரசு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. முதற்கட்டமாக தமிழ்நாடு அரசு தரப்பில், அதி கனமழை காரணமாக கடும் மழைப்பொழிவினை சந்தித்துள்ள விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் இரண்டு நாட்களுக்கு மேல் மழை, வெள்ளம் சூழ்ந்து, வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் நிவாரணமாக இரண்டாயிரம் ரூபாய் வழங்கவும் முதலமைச்சர் உத்தரவிட்டார்.
இந்நிலையில் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பழனி உத்தரவிட்டுள்ளார்.





