நடிகை பூர்ணாவிடம் மோசடி செய்த கும்பல் மாடல் அழகிகளிடமும் மோசடி செய்துள்ளது..!
நடிகை பூர்ணாவை மோசடி செய்ய முயன்ற கும்பல் விளம்பரத்தில் நடிக்க வைப்பதாக ஆசை காட்டி அழகிகளை வலையில் சிக்க வைத்தது அம்பலமாகியுள்ளது. இதுபற்றி மோசடி கும்பலிடம் இருந்து தப்பிய மாடல் அழகி ஒருவர் கண்ணீர் மல்க வேதனையை வெளிப்படுத்தி இருக்கிறார்.
பிரபல நடிகை பூர்ணாவை மோசடி செய்து பணம் பறிக்க முயன்ற கும்பல் தங்க கடத்தலில் மாடல் அழகிகளை ஈடுபடுத்த திட்டமிட்டு செயல்பட்டு உள்ளனர். ஐந்து ஆண்டுகளாக மாடலிங் செய்து வரும் மாடல் அழகி ஒருவர் இது தொடர்பான தகவல்களைத் தெரிவித்திருக்கிறார். நகை கடை விளம்பரத்தில் நடிப்பதற்கு அழைத்து பாலக்காட்டில் ஓட்டல் ஒன்றில் ரபீக் கும்பல் தன்னை அடைத்து வைத்ததாக கூறியுள்ளார்.
ஏற்கனவே ஆறு இளம்பெண்கள், 2 அறைகளில் குண்டர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்ததாகவும் அந்த மாடல் அழகி குறிப்பிட்டிருக்கிறார். தங்கம் கடத்த உதவுமாறு தாங்கள் நிர்பந்திக்கப்பட்டதாக கூறிய அந்த மங்கை மேலும் ஐந்து பேருடன் ஹோட்டலில் இருந்து தப்பி விட்டதாக தெரிவித்துள்ளார்.
மாடல் அழகி வெளியிட்ட தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் நடிகை பூர்ணா விடம் போலீசார் மூலம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.






