கோவை : கஞ்சா வியாபாரியிடம் ” லஞ்சம் ” வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்.கையும்,களவுமாக சிக்கிய கதை !!
ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் விஜயகுமார். முன்னாள் கஞ்சா வியாபாரியான இவர் சமீபகாலமாக கஞ்சா விற்பனை தொழிலை விட்டுவிட்டு கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார்.
கட்டிட மேஸ்திரியாக இருக்கும் விஜயகுமாரை கஞ்சா விற்பனை செய்வதாக போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அடிக்கடி அழைத்து பணம் வசூல் செய்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன் தினம் மீண்டும் விஜயகுமாரை அழைத்த போலீசார் 15 கிலோ கஞ்சா வைத்திருப்பதாக வழக்கு போட்டு விடுவதாக கூறி மிரட்டியுள்ளனர். சாதாரண வழக்காக பதிவு செய்வதற்கு ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்க வேண்டும் என போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் பேரம் பேசியுள்ளனர்.
மேலும்,ஒரு லட்ச ரூபாய் கேட்ட நிலையில் நேற்று முன் தினம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை விஜயகுமாரின் மனைவி மகேஸ்வரி போலீசாரிடம் கொடுத்துள்ளார். மீதிப்பணத்தை புரட்ட தனது தாலியை விற்க மகேஸ்வரி முயன்ற போது உறவினர் ஒருவர் தடுத்து லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் விஜயகுமார் மீது சாதாரண கஞ்சா வழக்கு பதிவு செய்து கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் அவரை அழைத்துக் கொண்டு நீதிமன்ற வாசலில் நின்று கொண்டிருந்தனர்.
அப்போது,லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் அறிவுரைப்படி மீதமுள்ள பணத்தை போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் சரோஜினி மற்றும் தலைமை காவலர் ராமசாமி ஆகியோரிடம் 70 ஆயிரம் ரூபாய் பணத்தை விஜயகுமாரின் மனைவி மகேஸ்வரி வழங்கினார்.அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் ஆய்வாளர் சரோஜினி, தலைமை காவலர் ராமசாமி ஆகிய இருவரையும் கையும்,களவுமாக கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணத்தையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கஞ்சா விற்பனை தொழிலை கைவிட்ட நபரிடம் லஞ்சம் வாங்கிய பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் கையும்,களவுமாக சிக்கிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






