லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்த போராட்டம் வாபஸ்..!
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அழைப்பு விடுத்திருந்த வேலைநிறுத்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. கனரக வாகனங்களில் குறிப்பிட்ட சில நிறுவனங்களின் ஜிபிஎஸ் மற்றும் வேக கட்டுப்பாட்டு கருவிகளை மட்டுமே பொருத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜிபிஎஸ் மற்றும் வேக கட்டுப்பாட்டு கருவிகளை உருவாக்குவதற்கு தமிழகத்தில் ஏராளமான நிறுவனங்கள் இருக்கும் நிலையில் குறிப்பிட்ட நிறுவனங்களிடமிருந்து மட்டுமே கொள்முதல் செய்யவேண்டும் என்பது ஏற்கத்தக்கதல்ல என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் தமிழக அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக வரும் 27 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்தது. இந்த நிலையில் லாரி சம்மேளன பிரதிநிதிகளுடன் போக்குவரத்து துறை அதிகாரிகள் சென்னையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அழைப்பு விடுக்கப்பட்ட போராட்டத்தை திரும்பப் பெறுவதாக லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.







