பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்கு செல்வதாக கூறி 4 துப்பாக்கிகளுடன் வந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர்..!
பிரதமர் மோடியின் பாதுகாப்பு பணிக்கு செல்வதாக கூறி மதுரை விமான நிலையத்திற்கு 4 ஆகன் துப்பாக்கிகளுடன் வந்த இளைஞரால் அங்கு பதற்றமான சூழல் உருவானது. மதுரை விமான நிலையம் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த சமயத்தில் பயணிகள் செல்லும் பாதுகாக்கப்பட்ட வழியில் இளைஞர் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் கம்பீரமாக வந்து நின்றார்.
பாதுகாக்கப்பட்ட பகுதி என்பதால் அங்கு விரைந்த பாதுகாப்பு படை வீரர்கள் இளைஞரை மடக்கிப் பிடித்த போது வரிசையாக 4 ஆர்கன் துப்பாக்கிகள் அவரிடம் இருந்ததை கண்டு திடுக்கிட்டனர். விசாரணைக்காக இளைஞரை அழைத்த போதுதான் மற்றொரு குண்டைத் தூக்கிப் போட்டார் அந்த இளைஞர்.
பிரதமர் மோடிக்காக மெய்காப்பாளனாக பணியாற்றுவதற்காக டெல்லிக்கு சென்று கொண்டிருப்பதாகவும் தனக்காக தனி விமானம் காத்திருப்பதாகவும் கூறியுள்ளார் அந்த இளைஞர். அதைக்கேட்டு பாதுகாப்பு படை வீரர்கள் ஆச்சரியம் அடைந்த நிலையில் தனக்கு ஆயிரம்கோடி ரூபாய் சொத்து இருப்பதால் உங்களால் என்னை தொடக்கூட முடியாது என தோரணையாக பேசி அங்கிருந்தவர்களை மீண்டும் அதிர வைத்துள்ளார்.
பார்ப்பதற்கு சாதாரண மனிதனாகவே தான் தோன்றினாலும் நாட்டின் நன்மைக்காக போராடும் ஸ்லீப்பர் செல் என்று அந்த இளைஞர் கூறியபோது தான் அங்கிருந்த அதிகாரிகள் சற்றே தெளிவான நிலைக்கு வந்தனர்.
வலுக்கட்டாயமாக அவரை பிடித்து சென்று விவரங்களை சேகரித்த போது அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரிய வந்ததையடுத்து குடும்பத்தாரை வரவழைத்து அவர்களுடன் அவரை அனுப்பிவைத்தனர். அதன் பிறகே விமான நிலையத்தில் ஏற்பட்ட பரபரப்பு அடங்கியது.






