துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர் தற்கொலை! உடலை சொந்த ஊர் கொண்டு வர கோரிக்கை!
துபாய்க்கு வேலைக்கு சென்ற இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக வந்த தகவலையடுத்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மகனின் உடலை சொந்த ஊர் கொண்டுவர உதவுமாறு சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இளையான்குடி அருகே உள்ள மருதக நல்லூரை சேர்ந்த அய்யனார், வளர்மதி தம்பதி கண்ணீருடன் தங்கள் மகனின் உடலை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
குடும்பத்தின் வறுமையை போக்க நான்காண்டுகளுக்கு முன்பு துபாய்க்கு கட்டட வேலைக்கு சென்ற இவர்களது மகன் திருச்செல்வம் அங்கு தற்கொலை செய்து கொண்டதாக நண்பர்களிடம் இருந்து வந்த தகவல் இந்த குடும்பத்தை கண்ணீரில் ஆழ்த்தி உள்ளது. முதல் இரண்டு ஆண்டுகள் சம்பளம் முறையாக வந்த நிலையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சரிவர சம்பளம் தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஊருக்கு திரும்பஎண்ணி இருந்த நிலையில்தான் திருச்செல்வம் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. திரு செல்வத்தின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர உதவ வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் இந்த முதிய தம்பதி கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடும்ப வறுமையை போக்கலாம் என்று எண்ணியிருந்த ஒரு இளைஞரின் கனவு சிதைந்தது. அவரின் குடும்பமும் வேதனைக்கு உள்ளாக்கி உள்ளது.






